**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

சனி, 3 அக்டோபர், 2009

பெரியார் பிறந்தநாள் விழா! சூலூர் பாவேந்தர் பேரவை - குடும்ப சந்திப்பு!

தந்தை பெரியார் 131 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி - பகுத்தறிவாளர்களின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி 17.9.2009 மாலை 6.00 மணிக்கு சூலூரில் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் அரங்கில் நிகழ்ந்தது.
சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றதோடு கோவை, பல்லடம் பகுத்தறிவாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்று - பகுத்தறிவு வாழ்க்கை நெறிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் உருவாகக் காரணமான பொறியாளர் சூ.ந. பன்னீர்செல்வம் - தென்மொழி இணையர் இந்தக் குடும்பச் சந்திப்பின் விருந்துப் பொறுப்பை ஏற்று அனைவரையும் உபசரித்தனர்.
பங்கேற்ற குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களோடு அவைமுன் தோன்றி - வாழ்க்கை அறிமுகம் வழங்கினர். பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற ஆசிரியர் மலர்விழி வரதராசு, ஆசிரியர் சூ.ப. வேலுமயில் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
ஆசிரியர் மு. நடராசன், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வேணுகோபால் - இருவரும் தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்தனர்.
தந்தை பெரியாரின் சாதனை வாழ்வையும் பகுத்தறிவு வாழ்வின் தேவையையும் விளக்கி எழுத்தாளர் பாமரன், புலவர் செந்தலை ந. கவுதமன் கருத்து விளக்கக் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
வெ.க.சண்முகவேல் தலைமையில் சூ.நா.வரதராசு வரவேற்புடன் தொடங்கிய குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி ச.அங்கமுத்து நன்றியுடன் நிறைவுற்றது.