**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

வியாழன், 16 ஏப்ரல், 2009

தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம்





கோவை மாவட்டம் சூலூரைப்பற்றி மொழி, இன, சமூக உணர்வாளர்களிடையே ஒரு நம்பிக்கையும் பற்றும் எப்போதும் உண்டு. ஊரையும் சமூகத்தையும் நினைப்பவர்கள் அதிகம் இருப்பதால். வேர்களை மறக்காமல் விழுதுகளாய்த் தாங்கி தன் சமூகக் கடமையைச் செய்து கொண்டிருப்பதாலேயே அறிஞர்களால் "சுயமரியாதைச் சூலூர்" என்று போற்றப்படுகிறது. அதை நிலை நாட்டும் விதமாக அறிவு மலர்ச்சிக்கும் கருத்து வளர்ச்சிக்கும் களம் அமைக்க எழுந்துள்ளதுதான் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம். பல இலக்கம் செலவு செய்து அவைக்கூடத்தை உருவாக்கியிருப்பவர் நமது பேரவையின் தோழர் சூ. ந. பன்னீர் செல்வம் அவர்களும் அவரது கொள்கைக் குடும்பமும்! கீழ்த்தளம் நடராசன் அங்கம்மாள் வளாகமாகவும் மேல்த்தளம் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
நடராசன் அங்கம்மாள் வளாகத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவர்
திரு. சூ. ர. தங்கவேலு அவர்கள் திறந்து வைத்துப் பேசினார்.
தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தை திரு. ந. மு. நடராசன் மற்றும் திருமதி. சூ. மு. அங்கம்மாள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
விழாவில், தோழர் பன்னீர் செல்வத்தின் தந்தை ஆசிரியர் ந. மு. நடராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமை தாங்கினார்.
ஊ. கி. நா. இரா. செல்வராசு மற்றும் பேரவையின் தலைவர் வெ.க. சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு சூ. அ. சுப்பிரமணியம், புலவர் சூ. ம. வெள்ளிங்கிரி, திரு.சூ. மீ. காளிமுத்து முதலியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பெரியகுளம் நகராட்சி ஆணையரும் பன்னீர் செல்வத்தின் நண்பருமான திரு. சூலூர் க.சரவணகுமார் சிறப்புரையாற்றினார்.
விழாவில் கட்டிடத்தை சிறப்பாக வடிவமைத்த பொறியாளரும் பன்னீர் செல்வத்தின் கொள்கைத் தோழருமான கவிஞர் அ.ப. சிவாவிற்கு சிறப்பு செய்யப்பட்டது.
வளாக நோக்க மகிழ்வுரையாக தோழர் சூ. ந.பன்னீர் செல்வம் பேசுகையில்,இந்த வளாகம் ஆனைமுத்து அய்யா பெயரைத் தாங்கி இருப்பதர்க்கு காரணம் அவர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றதன் நன்றி எனக் குறிப்பிட்டார்.
தன் சொந்த உழைப்பினாலும் கொண்ட கொள்கையினாலும் இந்த அவைக்கூடத்தை சமூகப் பயன்பாட்டுக்காக மட்டும் ஒதுக்கியிருக்கும் அவர்களது ஈகம் வாழ்க! கொள்கை வெல்க!
வேர்களைப்
பாதுகாக்கும் விருப்பமும் முயற்சியும் தலை தூக்கட்டும்;
தமிழகம் தழைத்தோங்கட்டும்;
வாழ வைத்தோரை வாழ வைத்து வாழ்க தமிழினம்!